Wednesday, October 27, 2010
வேலை....!
சுல்தான்பேட்டையில் இருந்து சிவாஜிநகருக்கு செல்லும் பேருந்தில் வழக்கம்போல
கூட்டம் நெருக்கியடித்தது. பாதுகாப்பாய் பெண்கள் மேல் இடிக்காமல் ஓரமாய் பொய் நின்றுகொண்டேன்.
இந்த ஒரு வருடமாய் வேலை தேடி தேடி பெங்களுருவில் தொலைந்து கொண்டிருக்கிறேன்.
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்துவிட்டு இன்ன பிற சாப்ட்வேர் கோர்சுகளும் முடித்தாயிற்று. என்ன செய்தால் வேலை கிடைக்குமென்றுதான் தெரியவில்லை.
படித்தவனை கேட்டில் நிற்கவைத்து பயோடேட்டா மட்டும் வாங்கிக்கொண்டு முதுகுக்கு பின்னால் கேட்டை அறைந்து சாத்தும் கொடுமை எங்களுக்கெல்லாம் பழகிய ஒன்று. யாருக்குத்தெரியும்? அந்த பயோடேட்டா செக்யுரிட்டியின் மகனுக்கு மழைக்கால கப்பலாகக்கூட மாறலாம்.
மனித வாழ்கையிலே அதிகமாய் அவமானப்படும் காலம், கல்லூரி வாழ்கை மற்றும் வேலை கிடைக்கும் காலத்திற்கு இடைப்பட்ட காலமே எனத்தோன்றியது. பத்து நாளைக்கொருமுறை வீட்டில் வாங்கும் 1000 ரூபாய் போகும் இடமே தெரியவில்லை. ஒரு வேளை இரு வேளை சாப்பிட்டு எதோ ஓடிக்கொண்டிருக்கிறது. டை கட்டி, கழுத்தில் ஐடி கார்டு போட்டு, காதில் இயர் போன் மாட்டி கம்பனி பஸ்ஸில் போகும் என் வயது இளைஞர்களை பார்க்க பார்க்க பொறாமையாய் இருக்கிறது.
சுய செலவுகளுக்காவது எதாவது கால் சென்டர் வேலை பார்க்கலாம் என்றால் அதற்க்கு தெரு தெருவை அலைந்து அவமானப்படுவதே தேவலாம். சுலபமாய் முகத்துக்கு நேராய் கேட்பான். "you have strong MTI . Mother Tongue Influence " . (டேய் நீங்கல்லாம் அமெரிக்கால பொறந்திங்களா? மதுரைல பொறந்தது என் தப்பா? ) will you leave the company if you get a software job ? (வேற கம்பனிக்காரன் ஒரு லட்ச ரூபா கொடுத்தா நீ போக மாட்டியா? என் படிப்புக்கேத்த வேல கெடச்சா கண்டிப்பா போவேன்.) அட போங்கடா.
இன்றைக்கு எதோ ஒரு கன்சல்டன்சியில் இருந்து கால் வந்திருக்கிறது. பார்க்கலாம்.
வினாத்தாளை பார்த்தவுடனே தெரிந்துவிட்டது. இதுவும் புஸ்சுதான் என்று. கேள்விகளை பார்த்து இதெல்லாம் இருக்கா? இன்னும் படிக்கணுமோ? தலை சுற்றியது. பத்து நிமிட காத்திருப்புக்குப்பின் அழைக்கப்பட்டேன். ஒரு பெண். 25 வயதிருக்கலாம். கால் மேல் கால் போட்டபடி தலையை மட்டும் ஆட்டி கூப்பிட்டாள். அவளின் ஒவ்வரு அசைவிலும் என்னுடைய தாழ்வு மனப்பான்மை எட்டி பார்த்தது. எல்லா கன்சல்டன்சியிலும் கேட்க நேரும் அதே பல்லவி. ஜாப் ஓரியண்டட் ட்ரைனிங். 25 ஆயிரம் ரூபாய். போடி நீயும் உன் ட்ரைனிங்கும் என மனதுக்குள் சொல்லிக்கொண்டே வெளியே வந்தேன்.
பையை தடவிப்பார்த்தேன். 22 ருபாய் இருந்தது. 10 ரூபாய் வீட்டுக்கு போன் பண்ண, 10 ரூபாய் ப்ரொவ்சிங் சென்டர் போய் மெயில் செக் பண்ண. 2 ரூபாய்க்கு சத்தியமாய் எதுவும் சாப்பிட கிடைக்காது. ஒரே ஆறுதல் அம்மாதான். போன் பண்ணாமல் இருக்க முடியாது. நாளை ஏதாவது இண்டர்வியு வரலாம். மெயில் செக் பண்ணாமல் இருக்கவும் முடியாது. இன்னிக்கு ராப்போது பட்டினிதான்.
மதியமும் சாப்பிடாமல் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. நிழலாய் இருந்த மரத்தடியில் உட்கார்ந்தேன். அப்பாவிடம் பணம் அனுப்ப சொல்ல வேண்டும். நினைத்தாலே வலித்தது. எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேன் என தெரியவில்லை. தெருநாய் ஒன்று அங்குமிங்கும் மோப்பம் பிடித்தபடி என்னருகே வந்து காலை தூக்கியது. சீ நாயே என துரத்தினேன். அரண்ட நாயின் கண்களில், எனக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி மின்னியதாய் தோன்றியது.
சுய இரக்கம் தின்ன, பசி காதை அடைக்க, எழுந்து நடக்கத்தொடங்கினேன். கண்கள் கலங்குவதாய் தோன்றியது.
தொலைபேசியில் எண்களை அழுத்திவிட்டு காத்திருந்தேன்.
"ஹலோ" , அம்மாதான்.
"அம்மா" தொண்டை அடைக்க கூப்பிட்டேன்.
"என்னப்பா நல்லா இருக்கியா? சாப்டியா? காசு இருக்கா? அப்பாவ அனுப்ப சொல்லவா?"
"அம்மா", உடையத்தொடங்கி இருந்தேன் நான்.
"என்னப்பா என்ன ஆச்சு அழுவுறியா?" "ஹலோ ஹலோ"
Subscribe to:
Posts (Atom)