Sunday, May 23, 2010

அன்பென்றாலே அம்மா!


நாளெல்லாம் உழைத்து
பின்னிரவில் இருப்பிடம் சேர்ந்து
பசியாற ஒன்றுமே இல்லாமல்
படுக்கையில் விழும்போது
உணர்கிறேன் அம்மா.
நான் சாப்பிட மறுத்து
நீயும் பட்டினியாய் உறங்கிய
உன் வலியை!.

------------------------------


நான் இல்லாத
நம் வீட்டின்
பண்டிகை நாட்கள்
உனக்கு,
மற்றவர்களுக்காக சமைப்பதோடு
மட்டுமே முடிந்துவிடுகிறது.

--------------------------


சற்றுமுன் நறுக்கிய
வெண்டையின் வாசத்தோடும்
வியர்வையில் கசங்கிய
புடவையோடு காட்சியளித்தாலும்
உனையன்றி இந்த உலகில்
எவளும் அழகில்லை அம்மா!...

அறிவாயா நீ?



ஒவ்வொரு முறையும்
உன்னைப்பிரிய நேர்கையில்
இருட்டறைக்குள் தள்ளிவிடப்படும்
குழந்தையாகவே உணருகிறேன்.
உன்னை பிரிதல் என்பது
தற்காலிகம்தான் என்றாலும்
அது ஏற்படுத்தும்
வெறுமை அளவிடமுடியாதது.
நீயோ பிரிதல்
காதலை அதிகரிக்குமென
தத்துவங்கள் பேசுகிறாய்.
கடிகார முட்களை
பிடித்து தொங்கினாலும்
அவை இரக்கம் காட்டி
நகர்வதே இல்லை.
நிறங்கலற்று பூக்கும்
காலையும் மாலையும்
என் வலிதாங்கி உதிரும்.
நீயில்லாத தருணங்களில்
நீண்டு பெருகும்
காலத்தின் பற்களில்
சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறேன்.
அகண்டவெளியில் தனியனாய்
உன்னைத்தேடி உன்மடி சேர
நான் ஏகும் பயணத்தின் வலி
அறிவாயா நீ?