Wednesday, May 5, 2010

எல்லாம் பிடித்தது உன்னால்... கடைசியில் பைத்தியமும்.


அன்றொரு நாள் பெய்த மழையில்
நீ எனக்காக குடை பிடித்தபோது
மழை பிடிக்க ஆரம்பித்தது.
நீ தோள்கள் உரசிக்கொண்டே அமர்கையிலும்
சமயத்தில் சாய்ந்துகொண்டே தூங்குகையிலும்
பேருந்து பயணம் பிடிக்க ஆரம்பித்தது.
பிரிதலைப்பற்றி உருக்கமாய்
நீ எழுதிய கவிதையால்
கவிதை பிடிக்க ஆரம்பித்தது.
மூக்குநுனி வேர்வையில் தீபவொளி மின்ன
நீ கைகுவித்து வேண்டுகையில்
பிள்ளையாரை பிடிக்க ஆரம்பித்தது.
யாருமே வாழ்த்தாது தனிமையில்
வாடியிருக்க, நீ மட்டும் வாழ்த்தியபோது
என் பிறந்தநாள் பிடிக்க ஆரம்பித்தது.
எனக்கு பிடித்த நிறத்தில் உடையணிந்து
என்முன் நீ நின்றபோது உடையோடு சேர்த்து
உன்னையும் பிடிக்க ஆரம்பித்தது.
என் காதல் சொல்லிவிட்டு காத்திருக்கையில்
மௌனமாய் நீ என்னை கடந்து சென்றபோது
பெண்ணே...
சத்தியமாய் எனக்கு
பைத்தியம் பிடிக்க ஆரம்பித்தது.