Thursday, May 6, 2010

தேவதையால் ஆசிர்வதிக்கப்பட்டவன்...(Part 2)

................
நீ தூக்கிவைத்து கொஞ்சுவது
உன் அக்காவின் குழந்தைதான் என்றாலும்
தாங்க முடியவில்லை என்னால்.
'அதிர்ஷ்டக்காரண்டா நீ' என வலிக்காமல்
குழந்தையின் கன்னம் கிள்ளுவேன் நான்.
சிவக்க ஆரம்பிக்கிறது உன் கன்னம்.

................
அய்யய்யோ என் தோடு காணவில்லை
என பதறினாய் நீ.
நீ பத்துநாளாய் பார்க்காததினால்
கோபித்துக்கொண்டு எங்கோ போயிருக்கும் என்றேன்.
போடா! என்று சிணுங்கினாய்.
உன் காலடியில் விழுந்து
என்னைப்பார்! என்னைப்பார்! என்று
கதறிக்கொண்டிருந்த உன் தோடை எடுத்து
மறுபடியும் மாட்டிக்கொண்டாய் நீ.
உன் மற்றொரு தோடு கீழே
விழுவதற்கு யோசிக்க ஆரம்பித்தது.

................
நீ பூக்காரியிடம்
விலை கேட்கும்போதே
நான்தான் நான்தான் என
கூடையிலிருந்த எல்லா பூக்களும்
கைகொட்டி ஆர்ப்பரித்தன
உனக்குப்பிடித்த மஞ்சள் ரோஜாவை
மட்டும் நீ எடுத்துக்கொண்டு போனபின்
மற்ற பூக்கள் எல்லாம்
அழுவதற்கு தயாராயின.

................
காலையில் தாமதமாய் எழுந்தாயா?
உன்னை பார்க்காத கோபத்தில்
எங்களை எரித்துக்கொண்டிருக்கிறது
இந்த சூரியன்.

................
என்னடா எப்போ பார்த்தாலும்
தெருவிலே வேடிக்கை என
கேட்ட என் அம்மாவிடம்
இரும்மா! திருவிழா தேர் வருது என்றேன்.
இப்போ திருவிழாவே இல்லையே என்று
அம்மா வெளியே வந்தபோது
என் வீட்டை நீ கடந்து சென்றாய்.
தலையில் அடித்துக்கொண்டு
உள்ளே சென்றார் என் அம்மா.

................