Friday, April 30, 2010

தூங்கும் தேவதையே...


தூங்கும்போது பெண்கள்
இன்னும் அழகு என்று
படித்ததாய் நியாபகம்.
நீ தூங்கும்போது
தூங்காமல் நான் உன்னை
ரசித்தபோது அதை உண்மையென்று அறிந்தேன்.
சிறு சப்தத்துக்கும்
திடுக்கிட்டு நீ செய்த
முகச்சுளிப்பில் ஓவியங்களும் தோற்றுப்போயின.
காற்றின் வேகத்தில்
ஒன்றோடொன்று சண்டையிட்டுக்கொண்டிருக்கும்
உன் முடிக்கற்றைகளை
என் விரல்களால் அதட்டுகிறேன்.
குளிர தொடங்கும் வேளையில்
மெலிதாய் நடுங்க ஆரம்பிக்கும்
உடலுக்கு என் போர்வையும் போர்த்தி
உன் குளிரையும்
நான் ஏற்கிறேன்.
மறுநாள் உன்னை எப்படி
மகிழ்விக்கலாம் என்றேண்ணியே
என் முக்கால்வாசி இரவுகளும் இறக்கின்றன.
"என்னடா தூக்கம் வரலையா" என்று
கேட்டபடியே நீ என்னை
நெஞ்சோடு அனைத்துக்கொள்ளும்போது
விடியத்தொடங்கிவிடுகிறது என் வானம்.

கலைந்த கனவும் சில கண்ணீர் துளிகளும்...


உடைந்த இதயத்திலிருந்து
சில்லுகளாய் விரிகிறது
உனது முகம்
வழியும் குருதியை
ரசித்துக் குடிக்கின்றது
உன் நினைவுகள்
இரவு கைநீட்டி
துடைத்தது போக
கொஞ்சம் தலையணைக்கும்
உணவாகிறது என்
கண்ணீர் துளிகள்.
கைப்பிடித்து நாம் நடந்த
பாதையில் இன்று நான்மட்டும்
தேடிக்கொண்டிருக்கிறேன் நம் காதலை.
தொலைந்து கொண்டிருந்த
என்னை மீட்டெடுத்தது
உன் காதல்
இன்று தொலைந்து போக
நாள் குறிக்கச் சொல்கிறது
உன் பிரிவு.
காணும் அனைத்தையும்
ஓவியமாய் அறியச்செய்தது
உன் அருகாமை
இதுவரை அறியாத
வலிகளை உணரச்செய்கிறது
என் தனிமை
நீ எனக்களித்த
துயரங்களை மௌனமாய்
ஏற்றுக்கொண்டுவிட்டேன்
சத்தமிடும் இதயத்திற்கு மட்டும்
ஒருமுறை உணர்த்திவிடு
ஏனிந்த தண்டனை என்று.
நீ கொடுத்த வாழ்கையை
நீயே எடுத்துக்கொள்
காதலும் கண்ணீரும் கலந்து
அது கணக்கும் வலி தாளவில்லை.
நீ வைத்த செல்லப்பெயரை
நீயே எடுத்துக்கொண்டபின்
என் உடம்பிற்கு மட்டும்
ஒரு பெயர் வைத்து
அழைதுக்கொண்டிருக்கிறது
இந்த உலகம்.