Thursday, June 3, 2010
காதல் நாட்குறிப்பில் கிழிந்த பக்கங்கள்.
கல்லூரியில் படிக்கையில் நண்பர்களில் ஒருத்தியாய் என் வீட்டிற்க்கு வந்திருந்தாய் நீ. எல்லோரும் சலசலவென பேசிக்கொண்டிருக்க நீ மட்டும் அமைதியாய் என் அம்மா கொடுத்த தேநீர் பருகினாய். மற்றவர்கள் என்னிடமிருந்து மட்டும் விடைபெற, நீயோ என்னைத்தவிர என் குடும்பத்தினர் எல்லோரிடமும் விடைபெற்றாய். நீ போனபின் உன்னைமட்டும் நினைவு வைத்துக்கொண்டு விசாரித்த என் அம்மாவுக்கு, "நம்ம வீட்ல அந்தப் பொண்ணுக்கு நிரந்தரமாய் ஒரு தேநீர் கோப்பை வாங்கி வை" என்று சொல்ல துணிவு வரவில்லை அப்போது.
என் அம்மா உனக்கு கொடுத்தனுப்பும் பதார்த்தங்களை உண்டுவிட்டு, டப்பா முழுவதும் சாக்லேட் நிரப்பித்தருவாய். என்னால் இது மட்டுமே முடியும் என்று. ஆனால் அதைவிட அழகாய் நன்றி சொல்ல யாராலும் முடியாது. கடவுள்களுக்கு செல்லப்பெயர் வைத்து நீ கூப்பிடும் அழகில், தெய்வங்களே உன்னிடம் நட்பு பாராட்ட வரும்போது நான் மட்டும் உன் நட்பினை மறுப்பேனா என்ன?. குங்குமத்திற்கு மேலே விபூதிக் கீற்றலுடன், காற்றில் அலையும் கூந்தலுடன் வரும் உன் வருகையை வாசமாய் அறிவிக்கும் காற்றுடன் சேர்ந்து என் இதயமும் உன் பின்னால் பறக்க ஆரம்பித்தது.
மீதமிருக்கும் கல்லூரி நாட்கள் குறுகக் குறுக, இறுகிக்கொண்டே வந்தது நம் நட்பு. நட்பையும் மீறிய ஒரு உறவை உன்னிடம் நான் உணரத்தொடங்கிய நாட்களில் உன் கண்களை நேராக பார்க்க கூசத்தொடங்கினேன். உன்னருகில் இருக்கும்வரை எதுவுமே பேசத் தோன்றாது எனக்கு. ஆனால் நீ கிளம்பிப் போன பிறகுதான் உன்னிடம் இன்னும் சிறிது நேரம் பேசி இருக்கலாமோ என பேச மறந்த வார்த்தைகள் ஒவ்வொன்றாய் நினைவிற்கு வரும். என் வீட்டிற்க்கு செல்ல எத்தனையோ வழிகள் இருந்தும், உன் இருப்பிடம் கடந்து செல்லும் வழியே சிறந்தது என நினைக்க ஆரம்பித்தேன். சமயத்தில் உன் பெயரை சொல்லி மற்றவர்களை அழைத்து அவர்களின் நகைப்புக்கும் ஆளாகினேன்.
மனித முகங்களற்ற கிரகத்தினை சேர வேண்டும். அதில் உயிருள்ள பொருட்களாய் நீயும் நானும் மட்டும். கனவுகள் மட்டும் உண்டு, கவிதைகள் மட்டும் உடுத்தி, காதலை மட்டும் சுவாசித்து வாழ்கையின் ஓரத்தை அடைந்திட வேண்டும் என ஏதேதோ கற்பனைகள் செய்து எப்போது உறங்கினேன் என அறியாமல் உறங்கிப்போயிருக்கிறேன். எங்கு சென்றாலும் விடாமல் துரத்த ஆரம்பித்தது உன் ஞாபகம். எங்கு நோக்கினாலும் இருளாய் இருக்க, வெளிச்சமான சமவெளிக்கு நீ மட்டுமே கூட்டிச்செல்வதாய் நினைத்து உன் விரல்பற்றி நடக்கத் தொடங்கியிருந்தேன் நான்.
உனக்காக எழுதிய நூற்றுக்கணக்கான கவிதைகள் உன்னைச் சேரும் அரங்கேற்றம் காணமலேயே கலைந்து போயின. உன் சின்ன சின்ன அசைவுகளும் எனக்குள் தடுமாற்றத்தை ஏற்படுத்த, நீயோ மறுபடியும் மறுபடியும் என்னை தடுமாற வைத்துக் கொண்டிருந்தாய். உன் காலடி ஓசை கேட்டாலே மனம் படபடக்க ஆரம்பித்தது. நீ கூறி காற்றில் கரைந்து போன வார்த்தைகளில் ஏதேனும் அர்த்தம் இருக்குமா என தேடிக்கொண்டிருந்தேன். எந்த வகையிலாவது உனக்கு என் காதலை விளங்க வைக்க முயன்று ஒவ்வரு முறையும் தோற்றுக்கொண்டே இருந்தேன். நேரான இன்பங்களுக்கு ஊடே, சிறிதளவு எதிரான துன்பங்கைளையும் வழங்கிக் கொண்டிருந்தாய் நீ.
இதோ வந்தும் விட்டது. உன்னைப் பிரியப்போகும் நாளும்.
பத்து நிமிடத்தில் வரப்போகும் ரயில் இன்னும் இரண்டு மணிநேரம் தாமதமாய் வந்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது. நீயில்லாத நாட்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன் என்ற கலக்கத்தில் நிற்கிறேன் நான். நீயோ யாரையோ வழியனுப்பிவிட்டு கண்களைத் துடைத்துக்கொண்டு வரும் பெயர்தெரியா மனிதர்களுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாய். எனக்காக ஏதாவது சொல், ஏதாவது செய்து என்னைக் காப்பாற்று என உன்னைப் பார்த்து கெஞ்சிக்கொண்டிருக்கிறது என் மனது.
இப்படியும் அழுத்தமாய் ஒருத்தியா? என்று உன்மேல் சிறிது கோபமும் வந்தது. கடைசி நிமிடத்தில் கதவருகில் இழுத்து கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு என் கைகளை பற்றிக்கொண்டாய். உன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் என் உள்ளங்கையில் பட்டுத்தெறித்தது. என்னவென்று யோசிக்கும் முன்பே உன்னைத் தூக்கிக்கொண்டு என் கண்களில் இருந்து ஓடி மறைந்தது ரயில். உன்னை வழியனுப்ப வந்தவன், என் வழி மறந்து நடந்து கொண்டிருக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)