சற்று முன்பு வரை
சிரித்துக்கொண்டிருந்த பொம்மை
குழந்தை ஊட்டிய பருக்கைகள் காய்ந்து
கையொன்றும் காலொன்றும்
இழந்து கிடக்கின்றது.
மறுபடி எவரேனும் குழந்தையிடம்
சேர்ப்பித்து உயிர்தருவாரா என
பரிதாபப் பார்வை பார்த்தபடி.
************
தன் வாழ்நாளில்
ஐந்து நிமிடமேனும்
ஏதோவொரு குழந்தைக்கு
பூச்சாண்டியாய் வாழ
கொடுத்து வைத்திருக்கிறது
ஒவ்வருக்கும்.
************
பள்ளி சென்ற
குழந்தை பத்திரமாய்
வீடு திரும்புகையில்
தாய் நன்றி கூறுவது
கடவுளுக்கு மட்டுமல்ல!
வேன் ஒட்டுனருக்கும்தான்.
************
யானை சவாரி செய்யும் தாத்தா
கதைகள் கூறும் பாட்டி
புதியதாய் பொம்மைகள் வாங்கிவரும் அப்பா
யாரிடமும் ஐந்து நிமிடங்களுக்கு மேல்
தங்குவதில்லை குழந்தை.
தன் தாயை கண்டபின்பு.
************
தூக்கும் அனைவரிடத்திலும்
பரப்புகிறது குழந்தை.
சிரிப்போடு சிறிது
செரலாக்ஸ் வாசத்தையும்.
************
சாப்பிட முடியாமல்
மீதம் வைத்த
உணவை பார்க்கையில்
உறுத்தியபடி நினைவுக்கு வந்தது.
உணவக வாசலில்
புறக்கணித்த பிச்சைஎடுக்கும்
சிறுமியின் கண்கள்.
************
No comments:
Post a Comment