Friday, April 30, 2010

தூங்கும் தேவதையே...


தூங்கும்போது பெண்கள்
இன்னும் அழகு என்று
படித்ததாய் நியாபகம்.
நீ தூங்கும்போது
தூங்காமல் நான் உன்னை
ரசித்தபோது அதை உண்மையென்று அறிந்தேன்.
சிறு சப்தத்துக்கும்
திடுக்கிட்டு நீ செய்த
முகச்சுளிப்பில் ஓவியங்களும் தோற்றுப்போயின.
காற்றின் வேகத்தில்
ஒன்றோடொன்று சண்டையிட்டுக்கொண்டிருக்கும்
உன் முடிக்கற்றைகளை
என் விரல்களால் அதட்டுகிறேன்.
குளிர தொடங்கும் வேளையில்
மெலிதாய் நடுங்க ஆரம்பிக்கும்
உடலுக்கு என் போர்வையும் போர்த்தி
உன் குளிரையும்
நான் ஏற்கிறேன்.
மறுநாள் உன்னை எப்படி
மகிழ்விக்கலாம் என்றேண்ணியே
என் முக்கால்வாசி இரவுகளும் இறக்கின்றன.
"என்னடா தூக்கம் வரலையா" என்று
கேட்டபடியே நீ என்னை
நெஞ்சோடு அனைத்துக்கொள்ளும்போது
விடியத்தொடங்கிவிடுகிறது என் வானம்.

கலைந்த கனவும் சில கண்ணீர் துளிகளும்...


உடைந்த இதயத்திலிருந்து
சில்லுகளாய் விரிகிறது
உனது முகம்
வழியும் குருதியை
ரசித்துக் குடிக்கின்றது
உன் நினைவுகள்
இரவு கைநீட்டி
துடைத்தது போக
கொஞ்சம் தலையணைக்கும்
உணவாகிறது என்
கண்ணீர் துளிகள்.
கைப்பிடித்து நாம் நடந்த
பாதையில் இன்று நான்மட்டும்
தேடிக்கொண்டிருக்கிறேன் நம் காதலை.
தொலைந்து கொண்டிருந்த
என்னை மீட்டெடுத்தது
உன் காதல்
இன்று தொலைந்து போக
நாள் குறிக்கச் சொல்கிறது
உன் பிரிவு.
காணும் அனைத்தையும்
ஓவியமாய் அறியச்செய்தது
உன் அருகாமை
இதுவரை அறியாத
வலிகளை உணரச்செய்கிறது
என் தனிமை
நீ எனக்களித்த
துயரங்களை மௌனமாய்
ஏற்றுக்கொண்டுவிட்டேன்
சத்தமிடும் இதயத்திற்கு மட்டும்
ஒருமுறை உணர்த்திவிடு
ஏனிந்த தண்டனை என்று.
நீ கொடுத்த வாழ்கையை
நீயே எடுத்துக்கொள்
காதலும் கண்ணீரும் கலந்து
அது கணக்கும் வலி தாளவில்லை.
நீ வைத்த செல்லப்பெயரை
நீயே எடுத்துக்கொண்டபின்
என் உடம்பிற்கு மட்டும்
ஒரு பெயர் வைத்து
அழைதுக்கொண்டிருக்கிறது
இந்த உலகம்.

Thursday, April 29, 2010

லோன்... (சிறுகதை)

'என்னங்க' என்றழைத்த லக்ஷ்மியை நிமிர்ந்து பார்த்தான் குமார்.
சொல்லு லக்ஷ்மி
நம்ம ரமேஷ்க்கு இன்ஜினியரிங் பீஸ் கட்டறதுக்கு இன்னும் ஒரு வாரம்தான் டைம் இருக்குங்க
எனக்கும் தெரியும்மா. நாளைக்கு பாங்க்குக்கு நம்ம ரமேஷையும் கூட்டிட்டு போறேன். மேனேஜர் வர சொல்லிருக்குறாரு.
கண்டிப்பா லோன் கிடைக்குமாங்க?
ம்ம். பார்க்கலாம்.

காத்திருந்த ஒவ்வரு நிமிடமும் மனதில் வலித்தது குமாருக்கு.
இத்தனைக்கும் மேனேஜர் ரொம்ப பழகியவர்தான்.
எதற்கெடுத்தாலும் பையன கூட்டிட்டு வாங்க, பையன அப்ளிகசேன் பில் பண்ண சொல்லுங்க என்று அலைக்களிக்கிறார்.
சின்ன பையன் அவனுக்கு என்ன தெரியும். இன்றும் கூட பைனல் வெரிபிகேசனுக்கு பையன் வரணுமாம். சே! என்றிருந்தது.

சார், உங்கள மேனேஜர் கூப்பிடுறாரு. நேரா போயி ரைட்ல முதல் ரூம்.

உள்ளே நுழைந்த என்னையும் ரமேஷையும் உட்கார சொன்னார் மேனேஜர்.
உன் பேர் என்னப்பா?
ரமேஷ் சார்.
+2 ல எத்தன மார்க்?
1048 சார்.
சரி. இந்த லோன் பத்தின டீடைல்ஸ் தெரியுமா? உங்க அப்பா சொன்னாரா?
தெரியும் சார். நான்தான் படிச்சு பில்அப் பண்ணேன்.
குட். இந்த லோன் பேங்க் உனக்கு குடுக்குறது. நல்லா படிச்சு வேலைக்கு போயி நீதான் கட்டனும்.
கண்டிப்பா நல்லா படிப்பேன் சார்.
ஒகே. நீ கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணு.
தப்பா எடுத்துக்காதிங்க குமார். உங்க அளவிலேயே பார்மாலிடீஸ் முடிச்சிட்டு இந்த லோன் அப்ரூவு பண்ணிருக்க முடியும்.
ஆனா உங்க பையன் நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு அவன படிக்க வைக்கிரிங்கனு உணரனும்.
அதுவும் இல்லாம அவனே அப்ளிகேசன் பில் பண்ணி இந்த லோன் பத்தி எல்லா விபரமும் தெரிஞ்சா சின்சியரா படிப்பான்.
இந்த லோன் நம்ம அப்பா வாங்கினது இல்ல நாம வாங்கினதுன்னு ஒரு எண்ணம் மனசில இருக்கும். நாளைக்கு உங்க பையன கூட்டிட்டு வந்து செக் வாங்கிக்கலாம். ஆல் தி பெஸ்ட்.

ரொம்ப தேங்க்ஸ் சார். போயிட்டு வரேன்.

குமார் மனதில் மேனேஜர் இப்போது ரொம்ப உயர்ந்த இடத்தில இருந்தார்.

Wednesday, April 28, 2010

என்னத்த சொல்ல

நண்பனா இல்ல என்னோட விரோதியா?

சென்னைல இருந்தப்போ கூட வேல பாத்தவன் இவன். ரொம்ப நல்லவன். ஆனாலும் குசும்பு ஜாஸ்தி. இவன்தான் ப்ளாக் எழுது போட்டோ எடுன்னு தூண்டி விட்டான். ஆனா என்னைய பத்தி வெளில என்ன சொல்லுது இந்த விஷகுழந்தைன்னு இன்னும் தெரியல.


எதோ ஒரு ஆர்வ கோளாறுல நானும் பதிவு எழுதிறேன்னு எறங்கிட்டேன்.
எத எழுதுறது என்னத்த எழுதுறதுன்னு ஒன்னும் புரியல.
ஏற்கனவே ஒரு மொக்க போட்டாச்சு. கதை எதாவது எழுதலாம்னு யோசிச்சேன்.
சரி இப்பவே கொல வெறியோட இறங்க வேணாம் கொஞ்ச நாள் போகட்டும்னு விட்டுட்டேன். எதாவது கலந்து கட்டி அடிக்கலாம்னு பாத்தா அதுக்கு ஒரு டைட்டில் வேற உக்காந்து யோசிக்கணும். "கலவை" அப்டின்னு அர்த்தம் வர்ற மாதிரி டைட்டில் யோசிச்சேன். சட்னி, சாம்பார், துவையல், அப்டி இப்டின்னு நெறய... ஆனாலும் ஒன்னும் நம்மள போட்டு தாக்கற மாதிரி அமையல.
அதுவும் இல்லாம, நாம ஒரு பேரு வச்சு அதே பேருல வேற யாராவது எழுதிக்கிட்டு இருந்தாங்கன்னா பேஜாரா ஆய்டும். சரி இப்போதைக்கு நம்ம பய புள்ளைக்கு பேரு வைக்க வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்.

இந்த வார சீரியல்:

விஜய் டீவீல அன்பே வா தான் நான் பார்த்த முதல் சீரியல். (முடிவு சொதப்பல்)
இப்போ கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் பார்க்கிறேன். ஆரம்பத்தில் கலக்கின சீரியல் இப்போ புயல்ல சிக்குன பட்டம் மாதிரி எங்கேயோ போகுது. (சின்ன பசங்க அரசியல்வாதி கூட சண்ட போடுறத விட்டுட்டு காமெடியா இருந்தா நல்ல இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து).

இந்த வார படம்:

இங்கே Date Night படம் பார்த்தேன். வழக்கமான அவுட்டிங் போரடிக்க, மாத்தி யோசி என்று டின்னருக்காக செல்லும் கணவன் மனைவி ஒரு இரவில் சந்திக்கும் பல பிரச்சனைகளை நகைச்சுவையாக சொல்லி இருக்கும் படம். ஒரு முறை பார்க்கலாம்.
அப்புறம் சுறாவுக்கு Waiting na.

கவிதை:

உன்னை காணும் வரை
இதயத்தின் ஒரு பகுதி இயங்குவதேயில்லை
உன்னிடம் என்ன பேசலாம் என்று தயங்கி தயங்கி
மிடறு விழுங்கி தோற்று போவேன்
உனக்கு கொடுப்பதற்காக ஆயிரம் வார்த்தைகள் இருந்தும்
கொடுக்க முடிந்தது மௌனம் மட்டுமே.
உன் கவனம் ஈர்க்க முனைகையில்
என்னை நானே பைத்தியமாய் உணர்கிறேன்.
ஆனால்...
திரும்பி போகுமுன் தலை திருப்பி
இதழ் விரிப்பாயே அதுபோதும்
மறுநாள் உன்னைக்காணும் வரை
என் இதயம் துடிப்பதற்கு.


Tuesday, April 27, 2010

அகதி

தேசம் விட்டு தேசம் வாழும்அகதிக்கூட்டத்தில்

இதோ இருக்கிறேன் நானும்.

கூட்டமில்லா பேருந்து

தூசியில்லாத காற்று

வீட்டுக்கே வரும் உணவு

பகட்டான உடை

போதுமென்ற பணம்

எல்லாம் இருக்கிறது இங்கு...

அம்மாவின் வாசம் நிறைந்த

ஒரு கவளம் சோறு

காய்ச்சல் நேரத்தில் நெற்றியில் பரவும்

அப்பாவின் உள்ளங்கை வெட்பம்

மழை நேரத்தில் கிடைக்கும்

சகோதரிகளின் சூடான தேனீர்

பார்த்த உடன் கால்களை கட்டிக்கொள்ளும்

அக்காவின் குழந்தை

இழக்க வேறெதுவுமில்லை இங்கு இந்நிமிடத்தில்.

நான்

விமல் பக்கங்கள்
என்னை பற்றி...
பிறந்ததும் வளர்ந்ததும் அழகிய மதுரையில். தற்பொழுது வாழ்வது தூய்மையான சிங்கையில்.
படித்தது கணினி பொறியியல். வேலை கணினி மென்பொருள்.
பிடித்தது எழுத்தும் இசையும்.
வேண்டுவது உங்கள் வருகையும் ஊக்கமும்.